நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறப்புகள்,கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்,ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி,பற்றிய கட்டுரை - Article about the special features of Kollimalai in Namakkal district, Kollimalai Arappaleeswarar Temple, Agaaya Gangai Falls...

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறப்புகள்,கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்,ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி,எட்டுக்கை அம்மன் கோவில், கொல்லிமலை வார சந்தை,பற்றிய சிறப்புக் கட்டுரை:

          இயற்கை வளம் மிக்க கொல்லிமலை இந்தியாவின் தெற்கு பகுதியில், தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத் தொடராகும். கொல்லி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின், கடைசி மலையாக அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலை பெயருக்கேற்றார்ப் போல் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கங்கே விட்டு இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும் அடர்ந்தும் காணப்படும். பற்பல நதிகள் இந்த கிழக்குத் தொடர்ச்சி மலையை ஊடறுத்து ஓடுவதால், தொடர்ச்சியாக இருக்க முடிவதில்லை போலும். கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புதமான மூலிகைகள் கொண்டும், அழகாக விளங்குகிறது "கொல்லி மலை".



          நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை, வடக்கு தெற்காக 28 கி.மீ பரப்பளவும், கிழக்கு மேற்காக 19 கி.மீ பரப்பளவும், மொத்தத்தில் 441.4 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டுள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது. நாமக்கல்லிலிருந்து கொல்லி மலைக்கு 43 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்து (Mini Bus) செல்கிறது.

          மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. செங்குத்தான இம்மலைப் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bend) உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும், பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். 

          கார், வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று. இம்மலைப் பாதை, மழைக் காலத்திற்கு ஏற்றது. 2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொல்லிமலைக்குச் செல்ல முக்கியமாக இரண்டு பாதைகள் உள்ளன. ஓன்று நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக, கோம்பை காடு என்னும் ஊர் வழியாக செல்ல வேண்டும். கோம்பையிலிருந்து 12 மைல் தூரம் சென்று "அறப்பளீஸ்வர சுவாமி" கோயிலை அடையலாம்.


      இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன. இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்கௌண்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம். அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம், அன்னாசி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், காப்பி, அதிகம் விளைகின்றது, மான்களும், மயில்களும் அங்கே சுற்றித் திரியும்.


       கொல்லிமலையில் இருந்து சுவேதா நதியும், கோம்பை ஆறு, அய்யாறு, கூட்டாறு, கருவோட்டாறு, கல்லக்குழியில் பஞ்ச நதி போண்ற ஆறுகள் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி காவிரி ஆற்றில் கலக்கின்றது. கொல்லிமலையில் நீர் ஊற்று நிறைந்த இடங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள குன்றுகளில் தேன் கூடுகளைக் காணலாம்.

      இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் வசித்தால் இது கொல்லிமலை என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்:

         நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் திருக்கோயில். ஏராளமான சித்தர்களும், முனிவர்களும், பக்தர்களும் பல ஆண்டுகளாக வழிபட்ட பூமி இது. ஓங்கி உயர்ந்த மலைகள், மலையெங்கும் மரங்கள், அருவிகள், ஓடைகள், ஆங்காங்கே சின்னஞ்சிறு கிராமங்கள் எனக் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற விதத்திலே, எழிலோடு திகழ்கிறது கொல்லிமலை. 



       பார்க்குமிடங்கள் எல்லாம் சில்வர் ஓக் மரங்களும், அவற்றைப் பின்னிப் பிணைந்திருக்கிற மிளகுக் கொடிகளும், பசுமை நிறைந்த வாழைத் தோட்டங்களும், மூலிகை வளம் மிக்க வனப் பகுதிகளும் இங்கே ரம்மியமான காட்சி தருவன ஆகும். இலக்கியத்திலும், வரலாற்றிலும் முக்கியமான இடம் கொல்லிமலைக்கு உண்டு. சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கொல்லிமலையின் சிறப்பு இடம்பெற்றிருக்கிறது. உதாரணமாக, அகநானூற்றுப் பாடல் ஒன்றில்,


‘முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி

செல்லா நல்இசை நிறுத்த வல்வில்

ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த

செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி‘

      என்று பாடல் வருவதைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட கொல்லிமலையில் அறப்பள்ளி என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு அறப்பளீஸ்வரர் என்ற திருநாமம். ‘கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்று திருநாவுக்கரசர் பெருமான் தமது பாடல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். கொல்லிமலையில் இருக்கும் வளப்பூர் நாடு என்னும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. "அறம் வளர்த்த நாயகி" அம்மையுடன் அறப்பளீஸ்வரர் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.


       இந்த ஆலயம் குறித்து புராணக் கதை சொல்லப்படுகிறது. கோயிலுக்கு வடக்கே, ஐந்து நதிகள் சங்கமிக்கின்றன. அதற்கு, ‘பஞ்ச நதி’ என்று பெயர். அந்த ஆற்றில் ஒருவர் மீன் பிடித்து சமைக்க முயல, கொதிக்கும் குழம்பில் இருந்து உயிரோடு மீன்கள் துள்ளிக் குதித்து ஓடி மறைந்தனவாம். இதனாலேயே, ‘அறுத்த மீனைப் பொருத்தி உயிர்த்த அறப்பளீஸ்வரர்’ என்னும் சொலவடை உண்டாயிற்று.


       கோயிலில் அறம் வளர்த்த நாயகி, அறப்பளீஸ்வரர், வினாயகர் மற்றும் முருகன் ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலின் குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்றால், மேற்கூறிய நான்கு தெய்வ சன்னிதிகளையும் ஒருசேர தரிசிக்கலாம். சுற்றுப் பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை, கால பைரவர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நவக்கிரஹங்களுக்கான வழிபாட்டு இடமும் உள்ளது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி:

          வரலாற்று சிறப்புமிக்க அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளது. நீர் வீழ்ச்சிக்குச் செல்ல 720 படிகட்டுகள் உள்ளன. இதை தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுகள் அமைத்துள்ளது. 160 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் பல்வேறு நோய்கள் தீருவதுடன், உடல் ஆரோக்கியம் அடைகின்றது. நீர்வீழ்ச்சியில் இருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.



        கோயிலுக்கு முன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நீரோடை உள்ளது. அந்த காலத்தில் நீரோடையில் ஏராளமான மீன்கள் துள்ளி குதித்து விளையாடியதாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, மீனைப் பிடித்து அதன் மூக்கில் தங்க கம்பியை பொருத்துவார்களாம். அப்படி மீனுக்கு முள் குத்தி விடுபவர்களுக்கு அந்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.


        மலைவாசிகள் அறப்பளீஸ்வரரை குல தெய்வமாக வணங்குகிறார்கள். மைசூர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் நாதநந்த யோகியின் சமாதி கோயிலுக்கு மேற்கில் இருக்கிறது. கோயிலுக்கு வடக்கில் பஞ்ச நதி ஆறு ஓடுகிறது. காடுகளும் சோலைகளும் நிறைந்த அப்பகுதியில் இயற்கையின் காட்சி கண் கொள்ளாதது. கோயிலுக்கு நேர் கிழக்கில் ½ மைல் கீழே பயங்கரமான பாதை வழியில் இறங்கிப் போனால் 160 அடி உயரத்தில் இருந்து ஆகாய கங்கை அருவி விழுவதைப் பார்க்கலாம்.

       அந்த அருவி நீர் பாயும் ஓடை வழியாகச் சென்றால், ஒரு சிறு செங்குத்தான குன்றும் அதனுள் குகையையும் காணலாம். இது கோரக்கர் குகை எனப்படுகிறது. குகைப் பக்கத்தில் தென்புறம் ஒரு அகழி இருக்கிறது. இது கோரக்கர் குண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு கோரக்கர் என்னும் சித்தர் தன் மாணவர்களுடன் கூடி தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த குகையைச் சுற்றிப் பல அரிய மூலிகைகளைக் காணலாம்.


      அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து வட பக்கம் 3 மைல் தூரத்தில் சோரம் அடையான் கோயில் உள்ளது. இது மலைவாசிகளால் வணங்கப்பட்ட முந்தைய தெய்வம் என கருதப்படுகிறது. இந்த கோயிலில் இருந்து மேற்குப்புறம் 1 மைல் தூரத்தில்தான் கொல்லிப்பாவை என்னும் சிலை உள்ளது.

      இங்கிருந்து கிழக்கு நோக்கி 2 மைல் சென்றால் அங்கு ஒரு குன்றின் மீது பெரியண்ண சுவாமி கோயில் இருக்கிறது. தரை மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் பழைய காலத்து குயவன் மண் ஓடுகளால் கோயிலும், மண்ணினால் செய்யப்பட்ட குதிரை சிலை வாகனத்தில் அமர்ந்து கையில் திரிசூலம் ஏந்தி வேட்டைக்குச் செல்லும் பாணியில் "பெரியண்ண சுவாமி சிலையும்" காட்சியளிக்கிறது.

      இங்கு பல சித்தர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் இங்கு சித்தர்களைக் காணலாம். அவ்வையார் முதல் 18 சித்தர்களும் இம்மலையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இதற்கு ஆதாரமாக குகைகளும் காணப்படுகிறது. சித்தர்கள் இங்குள்ள மூலிகைகளின் பயன்களை அறிந்து அவற்றை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளனர். நவபாஷாண சிலைகள், மூப்பு பலவித விலை மதிப்புள்ள கற்கள் இம்மலையில் இன்றும் காணப்படுகிறது. இம்மலையில் உள்ள மூலிகைகள் தவிர பதிணென்கீழ் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட பல அரிய மருந்துகள், தைலம், ரசமணி, மூப்பு, சுண்ணம் இவைகள் கல்லறைகளில் புதை பொருளாக வைக்கப்பட்டிருப்பதாக காலங்கி நாதர் மலைவளம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


கொல்லிப் பாவை கோவில் என்னும் எட்டுக்கை அம்மன் கோவில்:

  • கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புகளை அறிகிறோம்.
  • கொல்லிப்பாவை என்பது கொல்லிமலை மேல் சித்தர்களால் செய்து வைக்கப்பட்ட பதுமை. கொல்லிமலை தவம் செய்வதற்கும் தனித்து வாழ்வதற்கும் தகுதியான இடம். தேன், பலா, கொய்யா முதலிய பழவகைகள் நிறைந்த இடம் எனவே சித்தர்கள், முனிவர்கள் அங்கு தங்கினர். இதைத் தெரிந்து கொண்ட அசுரர்கள் அங்கு வந்து கூடினர். இவ்வாறு அசுரர்கள் வந்து கூடியதால் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது.


  • அப்பொழுது தேவரும், முனிவரும் அப்பகைவரை அடக்கவோ, எதிர்க்கவோ முடியாததால், அசுரர்கள் வரும் வழியில் அவர்கள் கண்டு மயங்கும் வண்ணம் அழகமைந்த பெண் வடிவம் செய்து வைக்க நிச்சயத்து, விஸ்வகர்மாவை அழைத்து தமக்கு உற்ற துன்பத்ததைக் கூற அவரும் அம்மலைமேல் அசுரர் வரும் வழியில் கல்லால் பாவை ஒன்றை செய்து, அதற்கு பல சக்திகளை ஊட்டி, அசுரர் வாடை பட்டவுடன் நகைக்கும் திறமும், காண்போரின் விழியும், உள்ளமும் கவர்ந்து அவருக்கு பெரும் காமவேட்கை வருவித்து, இறுதியில் கொல்லத்தக்க மோகினி வடிவம் அமைத்து அங்கே பிரதிஷ்டை செய்தார்.
  • இப்பாவையின் உடல் உறுப்புகள் அசையும் தன்மையானவை. இப்பாவையை நோக்கினோர் அச்சக்தி இயங்குவதையும், நகைப்பதையும் கண்டு பெண் என மயங்கி காமநோய் கொண்டு, அருகே செல்லும் போது அது தன் மாய சக்தியால் அவரைக் கொன்றுவிடும். இப்பாவை காற்று, இடி, மழை, பூகம்பம் இவற்றால் அழியாது என நற்றினை என்னும் நூலில் பரணர் என்னும் புலவரால் பாடப்பெற்றுள்ளது.
  • இக்கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

கொல்லிமலை வார சந்தை:

  • கொல்லிமலை என்றாலே சுற்றுலா பயணிகளுக்கு நினைவுக்கு வருவது அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகும். அதற்கு அடுத்தாற்போல் நினைவுக்கு வருவது அங்கு விளையும் பலா மற்றும் அன்னாசி பழங்கள் ஆகும்.
  • மலையில் உள்ள மண்வளம் மற்றும் நீர் வளத்தால் இங்கு விளையும் அன்னாசி பழம் மிகுந்த சுவையுடையதாக உள்ளது. அந்த பழத்துக்கு ஏற்றார் போல் சந்தையில் விலை கிடைத்து வருகிறது. இதனால் கொல்லிமலையில் உள்ள சோளக்காடு வாரச்சந்தையில் அன்னாசிபழம் அதிகமாக கிடைக்கிறது.
  • கொல்லிமலையில் அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய பகுதிகளில் தான் அன்னாசி அதிகம் விளைந்து வருகிறது. இங்குள்ள குழிவளவு, தேவகாய், மூடுபாலி, தேனூல், துவரபள்ளம், வெள்ளகுழி, நத்துகுழி போன்ற கிராமங்களில் விளையும் அன்னாசி பழங்கள், வாகனங்களில் ஏற்றப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.

  • இந்த மலையில் அதிக முட்கள்களுடன் காணப்படும் நாட்டு ரக அன்னாசியும், முட்கள் இல்லாமல் காணப்படும் கியூ ரக அன்னாசிகளும் விளைந்து வருகிறது. இதில் கியூ ரக அன்னாசி பழங்கள் ஜுஸ் தயார் செய்வதற்காக தொழிற்சாலைகளுக்கும், மற்ற பழங்கள் வெளி மாவட்ட விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது.
  • வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு செல்ல, வியாபாரிகள் சந்தையில் குவிந்து விவசாயிகளிடம் பேரம் பேசி அன்னாசி பழங்களை வாங்கி செல்கின்றனர்.
  • இதில் சிறு ரக அன்னாசி, நாட்டு ரகம், கியூ அன்னாசி என்று ரகங்கள் பிரித்து விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. சோளக்காடு வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

கொல்லிமலை தாவரவியல் பூங்கா:

        நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வாசலூர்பட்டியில் சின்ன சோளக்கண்ணி என்னும் கிராமத்திற்கு செல்லும் வழியில், முதுமக்கள் வாழ்ந்த தாழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் வாழ்ந்து வயது ஆனதும் இந்த தாழியில் அவர்களை வைத்து தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் சாப்பிட்டு அதிலேயே அவர்களது உயிர் பிரியும் வகையிலும் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.


       இந்த தாழிகள் சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், கண்டறியப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் சுரங்க பாதை ஒன்றும் காணப்படுகிறது. அது தரையில் சுமார் 5 அடி ஆழத்திலும் 5 அடி அகலத்திலும் இருப்பதாக தெரிகிறது.


      இதே போல் கொல்லிமலை பைல் நாட்டில் கீழ் கழுவூர் என்னும் இடத்தில், தாழி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவைகளை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்
றது.


     மூங்கில் நெல் அறுவடை : கொல்லிமலை அடிவாரத்தில் 40 வருடத்திற்கு பிறகு மூங்கில் தோப்பில் இருந்து இயற்கையாக கிடைக்கும் நெல் சீசன் தற்போது தொடங்கி உள்ளது.
கொல்லிமலை அடிவாரத்தில் காரவள்ளியில், வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது. அந்த பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் மூங்கில் தோப்புகள் காணப்படுகிறது.



      அந்த தோப்புகளில் அதிக அளவு உயரம் கொண்ட மூங்கில் மரங்கள் காணப்படுகிறது. தற்போது அந்த மரங்களில் பால் பிடித்து, பூ வைத்து உள்ள நிலையில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து அதன் எடை தாங்காமல் வளைந்து காணப்படுகிறது.
40 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அந்த பூ சீசன் தோன்றுவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பூவில் இருந்து இயற்கையான நெல் கிடைக்கிறது. அதாவது உரம் போடாமலேயே இயற்கையில் விளையும் தன்மை கொண்டதாகும்.


     அவ்வாறு விளையும் நெல் தற்போது அந்த பகுதியில் கொட்டி வருகிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் சமைத்து சாப்பிடவும் செய்கின்றனர். இது தவிர வனபகுதிக்குள் திரிந்து கொண்டு இருக்கும் காட்டுக் கோழி, குரங்கு, பன்றி போன்றவைகள் மூங்கில் மரங்களின் கீழே கிடக்கும் நெல்களை சாப்பிடுகிறது.


     இன்னும் 1 மாதம் வரையில் அந்த இயற்கையான நெல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த மூங்கில்களின் ஆயுட் காலம் முடிவடைந்து விடுகிறது.அந்த மரங்களை இதர உபயோகங்களுக்காக வெட்டி விடுகின்றனர். தற்போது அந்த மூங்கில் மரங்களை, கொல்லிமலைக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் காணும் போது அவைகள் நம்மை வரவேற்பதாக காணப்படுகிறது!!!



"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"




Post a Comment

புதியது பழையவை